சராசரியாக படிக்கும் மாணவரையும் அரவணைத்து செல்லுங்கள்; ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்

7


பெரம்பலுார்: ''அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் அரவணைத்து செல்லுங்கள்,'' என, பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். '

அரசு பள்ளிகளில் பயின்று, 10 மற்றும், 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, பரிசு வழங்கி பாராட்டினார். அதன்பின் அவர் பேசியதாவது:
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது, ஆசிரியர்களிடம் தங்களது குழந்தைகளை வாழ்வில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வகுப்பறையில் விட்டு செல்வார்கள்.

இதனால், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு குழந்தையையும் வெற்றி பெற வைக்கும் கடமை உள்ளது. வகுப்பறையில் ஆசிரியர்கள் குறைவாக பேசி, மாணவர்களை அதிகமாக பேச வைக்க வேண்டும். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் செயல்பாட்டினையும், நன்கு கவனிக்க வேண்டும். குறிப்பாக முதல் பெஞ்சில் உள்ள மாணவர்கள், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பார்கள், கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்கள், எந்தக் கேள்விக்குமே பதில் சொல்லமாட்டார்கள், அமைதியாக இருப்பார்கள்.

ஆகவே அனைத்து மாணவர்களின் செயல்பாட்டினையும் கவனித்து, அவர்களுக்கேற்ப வகுப்புகளை வழிநடத்த வேண்டும். அனைத்து மாணவர்களையும், ஆசிரியர்கள் அரவணைக்க வேண்டும். கற்கும் திறன் குறைந்த குழந்தைகளை, தமிழில் 'மெல்லக் கற்கும் குழந்தை' என உள்ளது. நான் அந்த வார்த்தையை 'தன்வேகத்தில் கற்கும் குழந்தை' என மாற்ற சொல்லியுள்ளேன். அப்படிப்பட்ட குழந்தைகள் தான், உலகத்தையே மாற்றியுள்ளார்கள். தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், போன்ற விஞ்ஞானிகள் ஹோம் ஸ்கூலிங் முடித்து உலகத்தையே புரட்டி போட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement