ராஜ்யசபா எம்.பி.,க்களாக கார்கே உட்பட 8 பேர் பதவியேற்பு

3



நமது டில்லி நிருபர்




காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பாஜ தலைவர் தருண் சுக் உள்ளிட்ட, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்பிக்கள் 8 பேர் இன்று (ஜூன் 29) பதவியேற்றனர்.

ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராதாகிருஷ்ணனின் அறையில் கார்கே தனியாகவும், மற்ற ஏழு எம்பிக்களும் ராஜ்யசபா அறையில் பதவியேற்றனர்.

கார்கே மற்றும் தருண் சுக் தவிர, மற்ற ஆறு புதிய எம்பிக்களில் ஜிதேந்திர மேக்ஜிபாய் கன்சாரியா மற்றும் மான்சிங் மெராமன் பர்மர் (குஜராத்), எம் நாகராஜா (கர்நாடகா), ராஜேந்திர ஹிராலால் ஜெயின் (மஹாராஷ்டிரா), சாரதா தேவி (மணிப்பூர்) மற்றும் அல்கா சிங் (ராஜஸ்தான்) ஆகியோர் அடங்குவர்.

ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.


மனமார்ந்த நன்றி




பதவியேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராஜ்யசபா எம்பியாக மீண்டும் பதவியேற்கும் வாய்ப்பைப் பெற்றேன். எதிர்க்கட்சித் தலைவராக இந்த அவையில் தொடர்ந்து பணியாற்றுவது மிகுந்த பெருமைக்கு உரிய விஷயமாகும். துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் தலைமைக்கும், சோனியா மற்றும் ராகுலுக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எனது சக எம்பிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடரில் பணியாற்ற ஆவலாக உள்ளேன். இதன் மூலம், தற்போதைய அரசை நாம் அனைவரும் இணைந்து அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வைக்க முடியும்.


குரல் எழுப்புவோம்




மக்களின் முக்கியப் பிரச்னைகள் குறித்து மன உறுதியுடன் தொடர்ந்து குரல் எழுப்புவோம். அதுவே எங்களின் முதன்மையான பொறுப்பாகும்; அதனை நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.

Advertisement