த.வெ.க. - தி.மு.க. 'பகை' ;கமென்ட் பாக்ஸ் 'புகை'

''சித்ராக்கா... மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் திருப்பூர்ல இண்டஸ்ட்ரி காரங்கள சந்திச்சார்ல... அப்ப ரொம்ப ஜோவியல் மூட்ல கலகலப்பா இருந்தாராம்''

சிரித்தவாறே துவங்கினாள் மித்ரா.

''அவரிடம் ஏற்கனவே அறிமுகமான நம்ம ஊர் எக்ஸ்போர்ட்டர்ஸை பார்த்த உடனே அவங்க பேரைச் சொல்லி அழைச்சாராம். ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியத்தைப் பார்த்து, 'நீங்க எங்க ஊரு பாணில டிரஸ் போட்ருக்கீங்க'ன்னு ஜாலியா வம்புக்கு இழுத்தாராம். ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேலைப் பார்த்து, 'நீங்க பாக்க அப்படியே நடிகர் திலீப்குமார் மாதிரி இருக்கீங்க'ன்னு சொன்னாராம்க்கா''

சுவாரசியத்துடன் சொன்னாள், மித்ரா.

''டிஸ்ட்ரிக்ட் முழுக்க இப்போ விஜய் பிறந்த நாளையொட்டி, நிறைய இடத்துல த.வெ.க. ஆபீஸ் புதுசு புதுசா திறந்திருக்காங்க... ரொம்ப சிம்பிளா பங்ஷன் வைக்கிறாங்க. டிராபிக் ஜாம் ஆகுற மாதிரி கொடிக்கம்பம் கூட பெருசா நடறதில்லயாம்க்கா''

மல்லுக்கட்டு ஜோர்



''மித்து... எலக்ஷனுக்குப் பிறகு தி.மு.க.வினர் சிட்டில சைலன்ட்டா இருக்காங்க கவனிச்சியா... பின்னணியில ஒரு கட்சி தாவல் மேட்டர் ஓடிட்டு இருக்கு. மாஜி எம்.எல்.ஏ. செல்வராஜோட ஆதரவாளர்கள் சிலர் இப்போ சத்தமில்லாம த.வெ.க.ல ஜாய்ன் பண்றதா பேச்சு பலமா ஓடுது.

''நம்ம ஏரியா கவர்மென்ட் ஹாஸ்பிடலையே கைக்குள்ள வச்சிருந்தாரே அந்த 'சுகு'மார நிர்வாகி... அவரு இப்போ சத்தமில்லாம த.வெ.கக்கு ஓடிட்டாராம். அதை த.வெ.க. காரங்க சோஷியல் மீடியால பெருமையா பதிவிட்டிருக்காங்க.

''அங்கதான் ஆன்லைன் சண்டையே ஆரம்பிச்சுது. போஸ்ட்டைப் பார்த்த உடனே தி.மு.க. காரங்க பேட் கமென்டா போட்டுத் தாக்க, பதிலுக்கு த.வெ.க.காரங்களும் இஷ்டத்துக்குத் திட்டி கமென்ட்லயே மல்லுக்கட்டுறாங்களாம்.''

சிரித்தாள் சித்ரா.



அ.தி.மு.க. மாற்றங்கள்

''திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய செயலாளரா வேல்குமார் சாமிநாதனை நியமிச்சிருக்காங்க அக்கா... போன சட்டமன்றத் தேர்தல்ல வடக்குத் தொகுதில 'சீட்' கேட்டும் இவருக்கு கிடைக்கல.

''ஆனா இப்போ எதிர்பாராத விதமா இந்த மாவட்ட செயலாளர் போஸ்ட் கைக்குக் கிடைச்சிருக்கு. ஆனா, மாநகர்ல இருக்கிற மத்த சீனியர் நிர்வாகீங்க, இந்தத் தடவையும் தங்களுக்கு வரவேண்டிய வாய்ப்பு பறிபோனதாக அதிருப்தில இருக்காங்க.

''வேல்குமார் கட்சிக்காக வைட்டமின் 'ப'வை தாராளமா இறைச்சிருக்காராம். அதேபோல ஜெ. பேரவை நிர்வாகி லோகுவும் கட்சிக்காக ஏகப்பட்ட 'சி'க்களை இறைச்சவராம்.

''அவருக்குத்தான் இப்போ பெரிய ஏமாற்றம். அவரு தெற்கு தொகுதி 'சீட்'டை ரொம்ப எதிர்பார்த்தார். ஆனா போன எலக்ஷன்ல அந்தத் தொகுதியை பா.ஜ.வுக்கு ஒதுக்குனதால சீட் கிடைக்கல.

''புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமியை முன்னாடி தற்காலிகமாக நியமிச்சிருந்தாங்க... இப்போ அவரை அப்படியே நிரந்தரமா நியமிச்சுட்டாங்க. ஆனா அவரு மனசுக்குள்ள ஆசைப்பட்டு எதிர்பார்த்தது இந்த மாநகர செயலாளர் பொறுப்பைத்தானாம்.

''இப்போ மாநகர் செயலாளரா இருக்கிற வேல்குமாரும், புறநகர் செயலாளரா இருக்கிற சிவசாமியும் 'காளிபாளையம்'ங்கற ஒரே ஊரைச் சேர்ந்தவங்கக்கா. ஒரே ஊர்க்காரங்களுக்கே ரெண்டு முக்கிய பதவியையும் துாக்கிக் கொடுத்திருக்குது தலைமை.

''மாஜி 'ஆனந்த'மயமானவரு, இப்போ எந்தப் பதவியும் கிடைக்காததால ஒதுங்கியிருக்காருக்கா. பொதுச்செயலாளர் பழனிசாமியும் கண்டுக்கலையாம். இவரு வேற கட்சிக்குத் தாவிடுவார்னு டாக் ஓடுது.

''அப்புறம், திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இருந்து பல்லடத்தைப் பிரிச்சு புறநகர் மாவட்டத்தோட சேர்த்த நாள் முதல் அ.தி.மு.க.காரங்க கட்சில ஒரே குழப்பமா இருக்குன்னு சொல்றாங்க''


எங்கும் ஐ.டி. விங்

''மித்து... மினிஸ்டர் கமலி எங்கு அவசர ஆய்வுக்குப் போனாலும், கட்சியில் உள்ள அவங்க ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு மட்டும் எப்படியோ முன்கூட்டியே தகவல் போய்ருது.

''அமைச்சர் ஆய்வு துவங்கறதுல இருந்து, அது நிறைவு பெறும் வரைக்கும் த.வெ.க. ஐ.டி.விங்க் காரங்க கூடவே நின்னு போட்டோ, வீடியோவை மொபைல் போனில் எடுத்து உடனே 'ரீல்ஸ்' போட்டு சோஷியல் மீடியால மாஸ் காட்டுறாங்க.

''மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிங்களுக்கு, சமீபத்தில் கால்நடை மருத்துவமனைக்கு மினிஸ்டர் கமலி ஆய்வுக்காக வந்து இறங்கினதுக்கு அப்புறம்தான் விபரமே தெரிய வந்துதாம். அதுக்குள்ள ஐ.டி. விங் காரங்க அங்க திபுதிபுன்னு ஆஜராகி ரீல்ஸ் எடுத்து முடிச்சிடுறாங்க...''


தலைகீழ் எப்.ஐ.ஆர்.

''மித்து... பருவாய்ல ஒரு கடை ஓனருக்கும் அங்க வாடகைக்கு இருந்த சிறுத்தை கட்சி நிர்வாகிக்கும் நடுவுல பெரிய வரவு செலவு பிரச்னை ஓடிட்டு இருந்திருக்குக்கா...

''ஒரு நாள் ராத்திரில வந்த அந்த சிறுத்தை கட்சி நிர்வாகி, ஆத்திரத்துல அந்த கடைக்குத் தீ வச்சுட்டுப் போயிட்டாராம். அந்த நபர் தீ வைக்கிற சிசிடிவி ஆதாரத்தோட கடை ஓனர் போலீஸ்ல போய் முறைப்படி கம்ப்ளைன்ட் குடுத்திருக்காரு.''

''வழக்கை விசாரிச்ச நாயக்கன்பாளையம் போலீஸ் அதிகாரி, கடைல இருந்த பிரிட்ஜ் வெடிச்சுருச்சுன்னு எப்.ஐ.ஆர தலைகீழா மாத்திப் போட்டு பைலை அமுக்கி க்ளோஸ் பண்ணிட்டாங்களாம்''


பதறிய போலீஸ்

''அக்கா... பல்லடம் பக்கத்துல பழைய அக்யூஸ்டு ஒருத்தர் கஞ்சா வச்சிருக்கிறதா எஸ்.பி. பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைச்சிருக்கு. உடனே தனிப்படை போலீஸ் அங்க போயிருக்காங்க.

''போலீஸ் வந்தவுடனே பயந்துபோன அந்த பழைய அக்யூஸ்டு, அங்கிருந்த பீர்பாட்டிலை உடைச்சு தனக்குத்தானே கழுத்துல குத்திக்கிட்டாராம்.

''அதைப்பார்த்து பதறிப்போன எஸ்.பி. பிரிவு போலீஸ், விஷயம் வெளில தெரிஞ்சா சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகிடும்னு சத்தமில்லாம, ரகசியமா ஒரு ஹாஸ்பிடல்ல அவரைச் சேர்த்து எப்படியோ உயிரைக் காப்பாத்தீட்டாங்களாம்.

''ஆனா இந்த மேட்டர்ல, லோக்கல் சட்டம் ஒழுங்கு போலீஸ் அவங்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் தரலையாம்''

அரட்டைக்கச்சேரி முடிவுக்கு வந்தது.







Advertisement