குமுளி மலைப்பாதையில் லாரி பழுது 10 நாட்களாக அகற்றாததால் நெரிசல்

கூடலுார், ஜூன் 30-

குமுளி மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்று 10 நாட்களுக்கு மேலாகியும் அகற்றாததால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகம். கம்பம் மெட்டு மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் அப்பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் குமுளி மலைப் பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. தற்போது வாகன போக்குவரத்து மேலும் அதிகரித்துள்ளது. இது தவிர தினம்தோறும் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான ஜீப்புகளும் இவ்வழியாக செல்கின்றன.

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு இரைச்சல் பாலத்திற்கு மேல் பகுதியில் லோடு ஏற்றி குமுளி நோக்கி சென்ற லாரி பழுதாகி நின்றது. இதனை அகற்றுவதற்கான நடவடிக்கை இல்லாததால் தினந்தோறும் வாகனங்கள் அப்பகுதியில் நெரிசலில் சிக்கி பல மணி நேரம் காத்திருந்து செல்கின்றன. போலீசாரும் இதை கண்டு கொள்ளவில்லை. தேசிய நெடுஞ்சாலை துறையினரும் அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

ஆபத்தான மலைப்பாதையில் தினந்தோறும் ஏற்பட்டு வரும் நெரிசலை தவிர்க்க எஸ்.பி. பிரவீன் கவுதம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement