கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்: 1.62 லட்சம் கால்நடைகளுக்கு இலக்கு

காஞ்சிபுரம்:கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, ஜூன் 29 முதல், செலுத்தலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்தார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோயால், விவசாயிகளுக்கு கால்நடை இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகின்றன.

பால் உற்பத்தி பாதிப்பு, மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் கோமாரி நோயால் ஏற்படுகின்றன.

எனவே, கால்நடைகளை தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 1 லட்சத்து, 62,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இயக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஒன்பதாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி, நாளை முதல், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

எனவே, பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கோமாரி தடுப்பூசி தவறாமல் செலுத்த உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement