தலைநகர் டில்லியில் துவங்கியது எஸ்ஐஆர் பணிகள்: மஹாராஷ்டிரா, கர்நாடகாவிலும் மும்முரம்

புதுடில்லி: தலைநகர் டில்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவங்கி உள்ளன.

வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ளவர்களை சேர்க்கவும், போலி பெயர்களை நீக்கவும், வெளிநாடுகளில இருந்து கொண்டு சட்ட விரோதமாக குடியேறி, வாக்காளர் அட்டை பெற்றவர்களை நீக்கும் வண்ணம், எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தலைநகர் டில்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவங்கி உள்ளன.

இந்த பணிகள் ஒருமாத காலம் நடைபெறும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஜூவை 29ம் தேதி வரை வீடு, வீடாக சென்று தற்போதுள்ள வாக்காளர்களிடம் உரிய விண்ணப்பங்களை வினியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட பின் சேகரிப்பார்கள்.

அனைத்து பணிகளும் முழுமை அடைந்த பின்னர், ஆக.5ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் மீது ஆட்சேபனை அல்லது கோரிக்கைகள் முன் வைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு, அக்.7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Advertisement