குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்

விருதுநகர்:   விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும் என கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

விருதுநகர் நகராட்சிக்  கூட்டம் நகராட்சித் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., செல்வம் பங்கேற்றார். கமிஷனர் விஜயக்குமார், துணை தலைவர் தனலெட்சுமி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

ராஜ்குமார், காங். : நகராட்சியில் அடிகுழாய் பழுது நீக்கம், மின் மோட்டார் பழுது நீக்குதல் ஆகிய டென்டர்கள் ஏன் விடவில்லை.

கமிஷனர்: நகராட்சியில் ரூ.3.60 கோடி குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளது. அதை வசூலித்தால் டென்டர் விடப்படும்.

காங். கவுன்சிலர் ராஜ்குமார் பிற கவுன்சிலர்களை பேச விடாமல் பேசிக் கொண்டே இருந்ததால், இதைக் கண்டித்து கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சுல்தான் அலாவுதீன், கலையரசன், உமாராணி, மாதவி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பின்பு தலைவர் அனைவரையும் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்தார். 

குடிநீர் பிரச்னை குறித்து கவுன்சிலர்கள் தெரிவிக்கவே, தி.மு.க., ஆட்சியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டது என நகராட்சித் தலைவர் மாதவன் கூறினார்.

அப்போது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெங்கடேஷ், சரவணன், மிக்கேல்ராஜ் ஆகியார் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அ.தி.மு.க., ஆட்சியில் தான் விருதுநகருக்கு குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என தெரிவித்தனர். 

செல்வம், எம்.எல்.ஏ.,: கட்சிகள் வேறு வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் விருதுநகரை முன்னேற்ற பாடுபடுவோம். எந்த கோரிக்கையாக இருந்தாலும் தெரிவித்தவுடன் நிறைவேற்ற தயாராக உள்ளேன்

ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்: சாலையோரக் கடைகளில் முறைகேடு வசூல் நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டும்.

ராமலட்சுமி, தி.மு.க.,: கல்லுாரி ரோட்டில் உள்ள நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்த 5 தேக்குமரங்களை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement