மருத்துவ உபகரண கடையில் ரூ.1 லட்சம் திருடிய 'குடி'மகன்

சேலம்:சேலம், அரிசிபாளையத்தை சேர்ந்தவர் தீனதயாளன், 44. இவர், 4 ரோட்டில், 'சர்ஜிக்கல் மெடிக்கல்' எனும் மருத்துவ உபகரணங்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கும் கடையை நடத்துகிறார். அவரது மாமனார் ஆறுமுகம் கவனித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை, 10:00 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 1 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து

விசாரிக்கின்றனர்.

வாந்தி எடுத்த திருடன்
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மர்ம நபர், பணத்தை திருடிய நிலையில், கடையின் உள்பகுதியில் ஏதும் கிடைக்குமா என பார்க்க சென்றபோது, வாந்தி எடுத்துள்ளார். அந்த நபர், 'போதை'யில் இருந்துள்ளார். வீடியோ பதிவில் அவரது அடையாளம் தெரிகிறது. விரைவில் அவரை கண்டுபிடித்து விடுவோம்' என்றனர்.
அதேபோல் அம்மாபேட்டையை சேர்ந்த நாகரத்தினம், 42, சன்னியாசிகுண்டில், கோழி கடை வைத்துள்ளார். அங்கும் கல்லா பெட்டியில் இருந்த, 5,000 ரூபாயை, மர்ம நபர் திருடியுள்ளார். இதுகுறித்து நாகரத்தினம் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement