மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 164 பேரை கைது  செய்த போலீசார்

உடுமலை: உடுமலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மத்திய அரசு பழைய தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தையே தொடர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை நாட்களை, 200 ஆக உயர்த்தி, கூலி ரூ.700 வழங்க வேண்டும். உதவித்தொகைக்கு விண்ணப்பித்து, மாதக்கணக்கில் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்,

சுற்றுலா மையங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வசதியையும்,  கோவில்களுக்கு மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்புகளுடன் செல்வதற்கு, அறநிலையத்துறை விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட துணைத்தலைவர் மாலினி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, உடுமலை தாலுகா தலைவர் பாலசுப்ரமணி, நிர்வாகிகள் முத்துக்குமார், அழகிரி, கமலா, ராணி, கண்ணையன், மகேஷ், பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, ரோடு மறியலில் ஈடுபட்ட, 93 பெண்கள் உட்பட, 164 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Advertisement