அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள்; டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., புகார்

11


சென்னை: 'அரசின் ரகசிய தகவல்களை, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பெறுவது குற்றச்செயல் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., அமைப்புச் செயலர் பாரதி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'இ - மெயில்' வாயிலாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய தனி நபர்கள், முதல்வர் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டங்கள், அதிகாரப்பூர்வ ஆய்வு கூட்டங்கள், பிற ரகசிய ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

மாநிலத்தின் மிக உயர்ந்த பொறுப்பை வகிக்கும் முதல்வர், இந்திய அரசியமைப்பு சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்திருப்பவர். அமைச்சரவை நடவடிக்கைகள், அரசின் முக்கிய தகவல்களின் ரகசியத்தை பாதுகாப்பது, அவரின் சட்டப்பூர்வ கடமை.

ஊடகங்களில் வெளியான தகவலின்படி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், முதல்வரின் நெருங்கிய உதவியாளர்களாக கூறப்படும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர், தொடர்ந்து அமைச்சரவை கூட்டங்கள், அதிகாரப்பூர்வ ஆய்வு கூட்டங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் நடக்கும் உயர்மட்ட அரசு ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இருவரும் அரசு பணியாளர்களா அல்லது தமிழக அரசின் பணிச்சட்ட விதிகளின் கீழ், ரகசிய அரசு நடவடிக்கையில் பங்கேற்க தகுதி உடையவர்களா என, கேள்வி எழுகிறது. ரகசிய தகவல்களை பெறுவது உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement