துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி; கட்சிக் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

4


சென்னை: துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைவதாக அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏ லீமா ரோஸ், வளர்மதி, காளியம்மாள் உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சி பணிகளில் மகளிரின் பங்கு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளிடையே இபிஎஸ் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது; அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து சிலர் கட்சியில் இணைக்கின்றனர். தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கின்றனர். அரை நூற்றாண்டு கண்ட அதிமுகவை அழித்து விடலாம் என்று நினைத்தால், அது யாராலும் முடியாது, இவ்வாறு அவர் பேசினார்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

* மின்வெட்டு ஏற்படுவதைக் கண்டித்து தீர்மானம்

* இடைத்தேர்தலுக்கு தயாராவோம் எனத் தீர்மானம்

* பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை தவெக அரசு தடுக்கத் தவறியதைக் கண்டித்து தீர்மானம்

* அரசு கல்லூரி உதவி பேராசிரியர் முறைகேடு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்

Advertisement