ரூ.169 கோடி வங்கி நிதி மோசடி: ஓய்வு பெறும் நாளில் ஐ.ஏ.எஸ்., கைது

1

புதுடில்லி: ஹரியானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், 169 கோடி ரூபாய் அரசு நிதி கையாடல் நடந்ததாக பதிவான வழக்கில், அந்த வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் செயலரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான பிரதீப் குமாரை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கு, 'ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட்' எனும் தனியார் வங்கியில் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தன.

அதில் இருந்து, போலி வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பண பரிவர்த்தனைகள் வாயிலாக, 504 கோடி ரூபாய் மாயமானது.

இது குறித்து அரசுக்கு தெரிய வந்ததும், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின், 504 கோடி ரூபாயும் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் வங்கி கணக்குகளில் மீண்டும் வரவு வைக்கப்பட்டன.

இந்த வழக்கை முதல்வர் நயாப் சிங், சி.பி.ஐ.,க்கு மாற்றினார். அவர்கள், ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ்.,கள், அரசு அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகள் உட்பட பலரை கைது செய்துள்ளனர்.

தற்போது, இந்த வங்கி நிதி மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராக இருந்த பிரதீப் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:

சண்டிகரில் உள்ள ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியின் செக்டார் - 32 கிளைக்கு, 169 கோடி ரூபாய் அரசு நிதியை, வைப்பு நிதியாக மாற்ற பிரதீப் குமார் அனுமதி அளித்துள்ளார்.

ஆனால், அந்த தொகைக்கு நிலையான வைப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. மாறாக, வாரியத்தின் அனுமதி பெறாமல், தொடங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு அந்த தொகை மாற்றப்பட்டது.

அதன் பின் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அந்த தொகையை மாற்றி கையாடல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பிரதீப் குமார் ஒத்துழைக்கவில்லை.

முன்ஜாமின் கோரி பஞ்சகுலா நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி பணிநாளில், அவரது இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement