காங்கிரஸில் இணைவதா, பாஜ உடன் கூட்டணியா: ஒரே நேரத்தில் இரு தரப்புடன் சரத் பவார் பேச்சு

9


மும்பை: காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை முழுமையாக இணைப்பதா அல்லது பாஜ தலைமையிலான தேஜ கூட்டணியில் சேருவதா என சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் பதவி வகித்து வருகிறார். மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை கட்சி இழுக்கும் குற்றச் சாட்டுகளுக்கு மத்தியில், தனது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் (சரத்சந்திர பவார்) ஏற்பட்ட உட்கட்சிப் பிளவுகளால், சரத் பவார் தனது கட்சியை முழுமையாக இணைப்பதா அல்லது பாஜ தலைமையிலான தேஜ கூட்டணியில் சேருவதா என இரு தரப்புடனும் பேச்சு வார்த்தையைத் துவங்கி உள்ளார்.

எட்டு லோக்சபா எம்.பி.க்கள் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட சரத்பவாரின் கட்சிக்குள் உட்கட்சி மோதல் நிலவுகிறது. ஐந்து எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைய விரும்புவதாகவும், மீதமுள்ளவர்கள் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணியுடன் இணைய விரும்புவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. எம்.எல்.ஏ.க்களும் இதேபோல் பிளவுபட்டுள்ளனர்; சிலர் காங்கிரஸுடன் இணைவதை ஆதரிக்கின்றனர், மற்றவர்கள் ஆளும் கட்சியையே விரும்புகின்றனர்.

இந்நிலையில் மகள் சுப்ரியா சுலேவுக்கு பெரிய பதவி வழங்கப்பட்டால் கட்சியை காங்கிரஸுடன் இணைக்க சரத்பவார் தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் செயற்குழுவில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் இது சாத்தியமாகும் என சரத்பவார் கட்சியினர் தெரிவித்தனர். இத்தகைய ஒப்பந்தம் பிளவைத் தடுத்து, எதிர்க்கட்சியை வலுப்படுத்தும் என்று ஆதரவாளர்கள் நம்புகின்றனர். மறுபக்கம் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்புவதாகவும் பேசப்படுகிறது.

சுப்ரியா சுலேவின் மகள், ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ள நாக்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் திருமணம் செய்துகொண்ட பிறகு, பாஜகவுடனான மறைமுகத் தொடர்பு வேகம் பெற்றதாகவும், சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் ஓர் இடமும், பவாரின் விசுவாசிகளுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

''மாநில அளவில் எந்த இணைப்புப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், கட்சியின் மேலிடம் என்ன முடிவு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்றும் கட்சி தலைவர்கள் கூறினர்.இருப்பினும், பாஜவுடனான தனது பேரம்பேசும் நிலையை வலுப்படுத்து வதற்காகவே சரத்பவார் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையை துவங்கி உள்ளார் என்கின்றனர்.

Advertisement