பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே, பள்ளி படிப்பை தொடர முடியாத பழங்குடியின பெண்களுக்கான, ஒரு மாத தொழிற்திறன் பயிற்சி திட்ட துவக்க விழா நடந்தது.
அமெரிக்காவின் சியாட்டில் இந்தியா குழு மற்றும் தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில், சிதம்பரம் அடுத்துள்ள கிள்ளை எம்.ஜி.ஆர்., நகரில், பள்ளி படிப்பை தொடர முடியாத பழங்குடியின பெண்களுக்கான ஒரு மாதம் ‘ஆரி’ வேலைப்பாடு தொழிற்திறன் பயிற்சி திட்ட துவக்க விழா நடந்தது. அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர் பிரவீணா வரவேற்றார். செண்பகம் பயிற்சி நோக்கம் குறித்து பேசினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். திட்ட இயக்குநர் ஜெயபிரகாஷ் சிறப்புறையாற்றினார்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் குமரவேல், உதவி பேராசிரியர் அருட்செல்வன் வாழ்த்துரை வழங்கினர். பயிற்சி ஆசிரியர் சங்கீதா, ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணப்பிரியா ஏற்பாடுகளை செய்திருந்தார். உதவி பேராசிரியர் கலைவாணி நன்றி கூறினார்.