திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்

6

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையை மறு அளவீடு செய்ய அவகாசம் அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சமண கோயில்கள், பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடவரை கோயிலை பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த மலையையும் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தொல்லியல்துறையின் அனுமதியுடன் யாரையும் மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மலையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், இடிபாடுகளை அகற்ற வேண்டும் என மத்திய தொல்லியல்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன்.

பரிசீலிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2025 பிப்.19ல் இரு நீதிபதிகள் அமர்வு,‛மத்திய கலாசாரத்துறை செயலர், தொல்லியல்துறை இயக்குனருக்கு புதிதாக மனு அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய வாய்ப்பளித்தபின் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.

அதிகாரிகளுக்கு புதிதாக மனு அனுப்பினேன். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. மத்திய கலாசாரத்துறை செயலர் விவேக் அகர்வால், மத்திய தொல்லியல்துறை இயக்குனர்கள் ராம்ஜி நிகாம், யதுபீர் சிங் ராவத் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏப்.8 ல் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் திருப்பரங்குன்றம் மலை பகுதியை அளவீடு செய்ய கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி முடிந்ததும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று விசாரித்தது.

அரசு தரப்பு,‛மலையை அளவீடு செய்ததில், சில இடங்களில் மாறுபாடு உள்ளது. மறு அளவீடு செய்ய அவகாசம் தேவை,' என தெரிவித்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பிரிவி கவுன்சிலின் உத்தரவிற்கு பின் மலை மீது ஏதேனும் விரிவாக்க பணி நடந்திருந்தால், அது தொடர்பான விபரங்களை அறிக்கையில் குறிப்பிட வேண்டும். விசாரணை ஆக.14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement