விலா குருத்தெலும்பின் மூலம் காது மறுசீரமைப்பு

மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், விலா குருத்தெலும்பை பயன்படுத்தி ஒரே கட்ட அறுவை சிகிச்சையில் 16 வயது சிறுவனின் காது மறுசீரமைக்கப்பட்டது.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறைத்தலைவர் நாகேஸ்வரன் கூறியதாவது:

பிறவியிலேயே வெளிப்புறக் காது வளர்ச்சியடையாத குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நான்கு கட்ட சிகிச்சையை ஒரே நேரத்தில் செய்தோம். விலா எலும்பின் குருத்தெலும்பை எடுப்பது, சிறுவனின் இயல்பான வலது காதை ஒத்து இருக்கும்படி அதை செதுக்கி வடிவமாக்கி தைப்பது, வளர்ச்சியடையாத காதை அகற்றும் அதே வேளையில், அதன் மேல் உள்ள தோல் மற்றும் ரத்தஓட்டத்தைப் பாதுகாப்பது, காதை சரியான இடத்தில் பொருத்துவதென நான்கு தனித்தனி நிலைகள் அடங்கியுள்ளன. இந்த அறுவை சிகிச்சை பல கட்டங்களாக சில மணிநேரம் முதல் பல நாட்கள் வரை இடைவெளியில் செய்யப்படும். இவை அனைத்தையும் உள்ளடக்கி ஒட்டுமொத்த அறுவை சிகிச்சையையும் ஒரே அமர்வில் செய்தது சாதனையான விஷயம் என்றார்.

மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் பேசுகையில் ‘‘தென் தமிழகத்தில் இவ்வளவு சிக்கலான 3 டி காது மறுசீரமைப்பு சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது இதுவே முதல் முறை’’ என்றார். டாக்டர்கள் ராகேஷ், ஹரிஹரன் உடனிருந்தனர்.

Advertisement