சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது; பயணிகள் நிம்மதி

2


புதுடில்லி: மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றங்களால் உயர்த்தப்பட்ட சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைய தொடங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கிய அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உயர்ந்தது. இதனால், செலவுகளை ஈடுகட்ட விமான நிறுவனங்கள், எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தின. இது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. இதனால், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலையும் சரிந்தது.

எனவே, விமானக் கட்டணத்தின் முக்கிய அங்கமான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை குறைக்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், சர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை 1 முதல் குறைத்துள்ளது.

ஐரோப்பா மற்றும் பிரிட்டன் வழித்தடங்களுக்கான சர்வதேச எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 38 சதவீதமும், ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க வழித்தடங்களுக்கு 28.5 சதவீதமும் ஏர் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது.

அதாவது, ஏப்ரல் 10ம் தேதி முதல் ஐரோப்பா செல்லும் பயணிக்கு ரூ.19,520ஆக இருந்த எரிபொருள் கூடுதல் கட்டணம், தற்போது ரூ.11,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா வழித்தடங்களுக்கு முன்பு ரூ.26,664 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.10,045 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், ஓமன் நாட்டின் சலாலா மற்றும் குவைத் ஆகிய இடங்களுக்கான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.இதன்மூலம், மேற்காசியாவில் வழங்கி வந்த அனைத்து இடங்களுக்கும் விமானச் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது

Advertisement