கோவிலுக்கு வந்த பெண்ணிடம் தங்க நகை திருடிய பெண் கைது

திருவள்ளூர்: புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த பெண்ணிடம், ஐந்து சவரன் தங்க நகையை திருடிய பெண்ணை, திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இங்கு, கடந்தாண்டு ஆகஸ்ட் 10ம் தேதி, புதுச்சேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி காந்திமதி, 61, என்பவர், குடும்பத்தினருடன் நேர்த்திக்கடன் செலுத்த வந்தார்.

அப்போது, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை திருடு போனது. காந்திமதி கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், நகை திருட்டில் ஈடுபட்டது, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தேசம்மாள், 52, என தெரிய வந்தது.

இதையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் சென்னை திருவல்லிக்கேணி சென்று, தேசம்மாளை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில்களில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தேசம்மாள் நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார், தேசம்மாளை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். தேசம்மாளிடமிருந்து, ஒரு சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement