உழைப்புக்கு மரியாதையில்லை!

'கட்சிக்காக உழைப்பவர்கள் யார், உழைப்பது போல் நடிப்பவர்கள் யார் என்று, தலைமைக்கு தெரியவில்லை...' என பொருமுகிறார், பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணீஷ் திவாரி.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. நாட்டில் இங்கு மட்டுமே ஆம் ஆத்மி ஆட்சி நடப்பதால், ஆட்சியை தக்க வைக்க அனைத்து விதமான தேர்தல் உத்திகளையும் அக்கட்சி கையாண்டு வருகிறது.

இக்கட்சிக்கு போட்டியாக, பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றன. காங்கிரஸ் சார்பில், சமீபத்தில் தேர்தலுக்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில், எந்த குழுவிலுமே மணீஷ் திவாரியின் பெயர் இல்லை.

இத்தனைக்கும், பஞ்சாபில் இருந்து தான் இவர் லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில், மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் மணீஷ் திவாரி.

இதனால், தனக்கு தேர்தல் பணியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார். அது பொய்த்து விட்டதால், 'ஜால்ரா தட்டுவோருக்கும், நடிப்பவர்களுக்கும் தான் கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது. உழைப்பாளிகளுக்கு இடமில்லை. எது நடக்க வேண்டுமோ, அதுதான் நடக்கும்...' என மணீஷ் திவாரி புலம்புகிறார்.

Advertisement