சொத்து குவிப்பு அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா மனைவியுடன் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவான வழக்கில், சென்னை தி.நகர் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா, மனைவியுடன் நேற்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சென்னை தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், 2016,- 2021ம் ஆண்டுகளில், வருமானத்துக்கு அதிகமாக 9.41 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில், சத்யா, அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோர் மீது, ஊழல் தடுப்பு சட்டம், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில், 2023ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, சென்னை எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்யா, ஜெயசித்ரா இருவரும் நேரில் ஆஜராகினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், '9.41 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. 130 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு, 132 சான்று ஆவணங்கள் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

சத்யா தரப்பில், 'தங்களை தவறாக சேர்த்திருப்பதால், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதை விசாரிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement