கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் 7ல் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.

கூட்டு நடவடிக்கை குழு தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார். தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் நீதிநாயகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடந்த மே, 25 முதல், 28 வரை, தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, அமைச்சர் ஒரு மாதம் அவகாசம் கேட்டுக்கொண்டதால் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.இந்நிலையில், ஒரு மாதம் முடிந்த நிலையில், இதுவரை டாஸ்மாக் தொழிலாளர்களின் கோரிக்கை ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, டாஸ்மாக் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 23 ஆண்டுகள் பணி தொடர்ச்சியுடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்.
காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை, டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தாமல், மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, பத்து ரூபாய் கூடுதல் விலை விற்றார் என்ற காரணத்திற்காக நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கை அடங்கிய மனுவை, வரும், 6ல், டாஸ்மாக் நிர்வாகத்திடம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும், 7ல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement