சேதமடைந்த சாலையால் முகுந்தகிரி மக்கள் அவதி

செய்யூர்:முகுந்தகிரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சித்தாமூர் அருகே செய்யூர்-மேல்மருவத்துார் நெடுஞ்சாலையில் இருந்து முகுந்தகிரி கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ., தார் சாலை உள்ளது.

முகுந்தகிரி, பேரம்பாக்கம், பெருக்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் தினமும் பயன்படுத்துகின்றனர்.

மேல்மருவத்துார் மற்றும் சித்தாமூர் பகுதியில் செயல்படும் பள்ளி, கல்லுாரி படிக்கும் மாணவ-மாணவியர் மற்றும் வெளியூர்களுக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் ,பேருந்து போன்றவற்றில் ஏராளமானோர் இந்த சாலை வழியாக செல்கின்றனர்.

இந்நிலையில் இச்சாலை கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவில் வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, முகுந்தகிரி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement