அரசு குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி பாவாணர் நகர் பகுதியில் சேதமடைந்த அரசு குடியிருப்புகளை புனரமைக்க கோரி தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி அரசு வீட்டு வசதி வாரிய செயலாளர் கேசவனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பாவாணர் நகர் ஏ10, ஏ11, டி1 மற்றும் டி2 பிளாக் அரசு குடியிருப்புகள் சேதமடைந்து பொதுமக்கள் வசிப்பதற்கு சிரமமான நிலையில் உள்ளனர். இதனையறிந்த நாராயணசாமி எம்.எல்.ஏ., அப்பகுதிகளை ஆய்வு செய்தார். பின் இது தொடர்பாக புதுச்சேரி தலைமை செயலகத்தில் அரசு வீட்டு வசதி வாரிய செயலாளர் கேசவனை நேரில் சந்தித்து சேதமடைந்த குடியிருப்புகளை ஆய்வு செய்து, தேவையான நிதியை ஒதுக்கி முழுமையான புனரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கு வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார்.