கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்;தமிழக அரசின் இலவச வேட்டி சேலை திட்டத்தில் புதிய ரக திட்டத்தை கைவிட கோரியும், பழைய திட்டத்திற்கு தொடர்ந்து நுால் வழங்க கோரியும் ஸ்ரீவில்லிபுத்துாரில் நெசவாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை மாதமாகியும் இலவச வேட்டி சேலை நெசவு செய்வதற்காக நூல் வழங்கப்படததால் நெசவாளர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வந்தனர்.

இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஜரிகை ரகம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளதால் துணைத் தொழிலில் ஈடுபடும் ஏராளமான நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயமும், தறிகளை மேம்படுத்த பல ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பழைய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும், புதிய திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் மாயாண்டி பட்டி தெருவில் நேற்று காலை 9:30 மணிக்கு கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் நெசவாளர்கள் ஈடுபட்டனர்.

உதவி இயக்குனர் வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் தீர்வு ஏற்படுத்தி தருவதாகவும், இடைக்கால நிவாரண தொகை கிடைக்க ஆவண செய்வதாக உறுதி அளித்தார். இதனையடுத்து நெசவாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement