உயர் அழுத்த மின் கம்பியில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர், காற்றில் கிழிந்து உயர் அழுத்த மின் கம்பியில் விழுந்து தொங்கி வருவதால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரங்களிலும், சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ள இடங்களில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள் சாலையில் விழுவதால் விபத்து ஏற்படுகின்றன.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்துார் பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் காற்றில் கிழிந்து, அருகே உள்ள உயர் அழுந்த மின் கம்பியில் விழுந்து தொங்கி வருகிறது.

இதனால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதோடு, நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, கிழிந்து தொங்கும் பேனரை அகற்றுவதுடன், நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement