மதுக்கடை கேஷியர் மீது தாக்குதல் தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு

பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தில் தனியார் மதுபான கடை ஒன்று வாடகை இடத்தில் இயங்கி வருகிறது. அந்த இடத்தின் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி. இவர், மதுக்கடை உரிமையாளருக்கு கிரயம் செய்து கொடுப்பதாக கூறி, கடந்த 2021ம் ஆண்டு 20 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கி உள்ளார். 3 மாதத்திற்குள் இடத்தை கிரயம் செய்து தருவதாக கூறியவர், அதன்படி, செய்து கொடுக்கவில்லை.

சந்தேகம் அடைந்த மதுக்கடை உரிமையாளர் ஆனந்தன், விசாரித்தபோது சம்பந்தப்பட்ட இடம் ஏற்கனவே கடன் பிரச்னை காரணமாக நீதிமன்றத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு, இன்னொரு நபருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த ஆனந்தன், ஆதிலட்சுமியிடம் பணத்தை திருப்பி கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஆதிலட்சுமி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், வாடகை பணம் கேட்டு, மதுக்கடையின் ஷெட்டரை திறக்கவிடாமல் அதன்முன்பு செங்கற்களை அடுக்கி பிரச்னை செய்தார்.

இதையடுத்து, வேறு பக்கம் வழி திறந்து மதுக்கடை இயங்கினர். நேற்று முன்தினம் காலை மதுக்கடையில் ரெட்டிச்சாவடியை சேர்ந்த கேஷியர் சிவா, 44, என்பவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஆதிலட்சுமி மற்றும் அவரது கணவர் ரமேஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் மதுபான கடையின் முன்பாக ஒரு லோடு ஜல்லியை கொட்டி, பாதையை அடைத்து, கேஷியர் சிவாவை ஆபாசமாக திட்டி, ஜல்லிகளை வீசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

சிவா புகாரின்பேரில், ஆதிலட்சுமி உட்பட 3 பேர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement