ஆலத்துாரில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

திருப்போரூர், ஜூலை 12-

ஆலத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருப்போரூர் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சியில், ஜே.ஜே.நகர், அன்னை தெரேசா நகர், கங்கையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் ஏரியை ஒட்டியுள்ள கிணற்றிலிருந்து, குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இங்கு, கடந்த ஒரு வாரமாக குடிநீர் முறையாக வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைவரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, மின் அழுத்த குறைபாட்டால் மின் மோட்டார் இயங்காமல் நீரேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்காலிகமாக டேங்கர் லாரிகள் மூலம் போதிய குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement