ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார், ஜூலை 12–

ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள வழிகாட்டி அறிவிப்பு பலகையால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் மாநில நெடுஞ்சாலையில், ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. தவிர, சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில், முக்கிய சந்திப்புகளில் சாலையின் நடுவே, திசை காட்டும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் நோக்கியா துணை மின் நிலையம் அருகே, சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் அறிவிப்பு பலகை சேதமடைந்து பெயர்ந்து உள்ளது.

காற்று வேகமாக வீசும் போது, அறிவிப்பு பலகை மேலும் பெயர்ந்து, நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது விழும் அபாயம் உள்ளது.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, சேதமடைந்துள்ள அறிவிப்பு பலகையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement