மைதானம் இல்லாததால் மன உளைச்சலில் மாணவர்கள்

மேலுார்: கொட்டாம்பட்டி பள்ளிகளில் விளையாட்டு துறை ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.

கொட்டாம்பட்டி ஒன்றியத்தின் 27 ஊராட்சிகளில் 11 மேல்நிலைப்பள்ளிகள், 5 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இவற்றில் கொட்டாம்பட்டி, சேக்கிப்பட்டி பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்தனர். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களை பணி மாறுதல் செய்ததால் தற்போது ஆசிரியர்கள் இல்லை என்பது பெற்றோர் குற்றச்சாட்டு.பொதுவாக உடற்பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டுப் பயிற்சியுடன், குறித்த காலத்தில் மாணவர்கள் வருகை, பள்ளி நேரத்தில் வகுப்பறைக்கு செல்லாதோரை கண்காணிப்பது, மாணவர்களின் ஒழுக்க செயல்பாடுகளை கண்காணிப்பர். இந்நிலையில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மாணவரின் பெற்றோர் கல்லாணை சுந்தரம் கூறியதாவது:

உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாமல் விளையாடாத மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மனதளவில் சோர்வும் அடைகின்றனர். தவறான பழக்கத்திற்கு அடிமையாகும் நிலையும் உள்ளது. விளையாட்டு துறையில் சாதனை புரியும் மாணவர்களுக்கு கல்லுாரி படிப்பு, வேலை வாய்ப்பில் வழங்கும் முன்னுரிமையை இழக்கின்றனர். மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் உடற்பயிற்சி ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சி.இ.ஓ., தயாளன் கூறுகையில், ''தற்போது நடைபெறும் கலந்தாய்வு முடிவடைந்ததும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்'' என்றார்.

Advertisement