ரூ.25,000 கோடி கோவில் சொத்து தாரைவார்ப்பு; அறநிலையத்துறை உத்தரவால் வெடித்தது சர்ச்சை!

10

சென்னை: கரூரில், 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களுக்கான பத்திரப்பதிவு தடையை நீக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டிருப்பது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, திருப்பூர் இணை கமிஷனருக்கு, அறநிலையத் துறை கமிஷனர் வினய் பிறப்பித்த உத்தரவு:

கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியர், கல்யாண பசுபதீஸ்வரர், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர், வெஞ்சமாங்கூடலுார் விக்ருதீஸ்வரர் ஆகிய கோவில்களின், 3,085 ஏக்கர் நிலங்கள், கோவில் பெயரில் இருந்தன. பின், தனி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

இந்த நிலங்களுக்கு, அறநிலையத்துறை அதிகாரிகளால் தவறுதலாக பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் தடையை நீக்கலாம் என, கரூர் கலெக்டர் பரிந்துரைத்துள்ளார்.

இதனால், 3,390 பட்டாதாரர்கள் பயனடைவர். எனவே, உடனடியாக தடை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கோவில் சொத்துக்களை அபகரிக்கும் செயல் என, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:



கரூரில், 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 3,085 ஏக்கர் கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்கும் நோக்கில், அவற்றின் மீதான பத்திரப் பதிவுத் தடையை,

அறநிலையத் துறை நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, கோவில் சொத்துக்களை த.வெ.க., அரசு சூறையாடத் தொடங்கியுள்ளது கண்டனத்திற்குரியது.

ஆலய வழிபடுவோர் சங்கத்தின் நிறுவனர் டி.ஆர்.ரமேஷ்:



தமிழகத்தில், த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின், கோவில்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு பெரும் துரோகம் இது. இந்த கொடுஞ்செயல் தி.மு.க., ஆட்சியில் கூட நடக்கவில்லை.

ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆதிசேஷன்:



கரூருக்கு நேற்று முதல்வர் விஜய் வந்த நிலையில், கோவில் சொத்துக்களை பட்டா மாறுதல் செய்ய வசதியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பவர்களுக்கு சாதகமாக அரசே செயல்படுவது ஏற்க முடியாதது. இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார்:



கோவில் நிலங்களை தனி நபர்களுக்கு தாரைவார்க்கும் வகையில், பத்திரப்பதிவு தடை நீக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளே, அவை கைமாறும் நிலையை உருவாக்குவது, இறைவனுக்குச் செய்யும் துரோகம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement