அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை; ஒரு வாரத்தில் ரூ.22.33 லட்சம் பறிமுதல்

9


சென்னை: அரசு அலுவலகங்களில் நடந்த ஊழல் தடுப்பு சோதனையில், ஒரு வாரத்தில், 22.33 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஜூலை 4ம் தேதி முதல், 10ம் தேதி வரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.


லஞ்சம்




அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், 11 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கணக்கில் வராத, 12.46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மாநில எல்லைகளில் நடத்திய சோதனையில், 9.87 லட்சம் ரூபாய் என, மொத்தம், 22.33 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

மேலும், 7ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், கட்டட வரைபட அனுமதிக்கு, 15,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, இளநிலை உதவியாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். அதே நாளில், திருப்பூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி காவலர் அழகுராஜா, இரு சக்கர வாகனத்தின் உரிமத்தை திருப்பி தர, 1,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.


கைது




அதே நாளில், சிவகங்கை மாவட்டத்தில், திருமணம் செய்து வைக்க, திருப்புவனம் போலீஸ் எஸ்.ஐ., 3,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். மேலும், அதே மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்ற 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, கிராம உதவியாளர் கணேசன் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய, 2,500 ரூபாய் லஞ்சம் பெற்ற தாலுகா அலுவலக உதவியாளர் ஆரோன், 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அதே நாளில் தென்காசி மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய நில அளவையர் சங்கர், 10,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது சிக்கினார்.

மேலும், லஞ்சம் பெற்ற தாசில்தார் ஆதிபகவான், ஓட்டுனர் கந்தசாமி ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement