கோவில் நிலங்களை தனியாருக்கு எப்படி பட்டா வழங்க முடியும்? முதல்வர் விளக்கமளிக்க பா.ஜ., வலியுறுத்தல்

8

கோவை: ''கோவில் நிலங்களை எந்த அடிப்படையில் தனியாருக்கு பட்டா வழங்கினர் என்பது குறித்து முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கரூர் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் நிலத்தை, அவசர கதியில், அறநிலைய துறை இணை கமிஷனர் பரிந்துரையில் ஒரே நாளில், தனியாருக்கு பட்டா வழங்கி உள்ளனர்.

கோவில் நிலங்களுக்கு எந்த அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது என்பது குறித்து முதல்வரும், அறநிலையத் துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும். கோவில் நிலங்களை தனியாருக்கு வழங்க அரசுக்கு எந்த தகுதியும் இல்லை. கோவில் சொத்துக்களை மீட்கும் போராட்டத்தை பா.ஜ., நடத்தும்.

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியதை எதிர்க்கவில்லை. பல துறைகளில், ஏற்கனவே பணிக்காக காத்திருக்கும் வாரிசுகள் மற்றும் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

பணம் கொடுப்பது மட்டுமே லஞ்சம் அல்ல; வேண்டியவர்களுக்கு செய்யும் உதவியும் ஒரு வகையில் லஞ்சம் தான். கரூரில் நடந்த முதல்வர் நிகழ்ச்சியை அரசு பள்ளிகளில் ஒளிபரப்பியது தவறான முன்னுதாரணம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடு தொடர்ந்து மாறி வருகிறது; தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது ஒரு மாதிரியும், தற்போது வேறு மாதிரியும் பேசுகிறார்.

வரும் 2029 லோக்சபா தேர்தலில், பல கட்சிகள் இணைந்து பா.ஜ.,வை எதிர்க்கத் தயாராவது தெளிவாக தெரிகிறது. பா.ஜ.,வை பார்த்து அனைவரும் பயப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.




@block_G@

 'உருக்குலையும் உயர் கல்வித்துறை'



தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

தமிழகத்தில், 181 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 125 முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உயர் கல்வித்துறை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில் அரசு கல்லுாரிகளை அலட்சியம் செய்த விளைவால் தான், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விகிதம் பெரிய அளவு குறைந்து போனது.

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், அரசு கல்லுாரிகளை நிராகரித்து விட்டு, கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என, தனியார் கல்வி நிலையங்களை நோக்கி மக்கள் படையெடுப்பது, அரசுக்கு அவமானம்.

அரை நுாற்றாண்டிற்கு பின், தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் காங்கிரசை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன், உருக்குலைந்து கொண்டிருக்கும் உயர் கல்வித்துறையை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_G

Advertisement