கூவம் ஆற்றில் மேம்பால பணி மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு

கடம்பத்துார்: சத்தரை பகுதியில், 14 கோடி ரூபாயில் கூவம் ஆற்றில் கட்டப்பட்டு வரும், மேம்பால பணிகள் மந்தகதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்தில், சத்தரை – கொண்டஞ்சேரி இடையே உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம், கடந்த 2016, 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சேதமடைந்தது.

இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, கடந்த 2025ம் ஆண்டு, ஜனவரியில், மத்திய அரசு உத்தரவுப்படி, 14 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. 150 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில், 13 துாண்களுடன் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த மேம்பால பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, சத்தரை பகுதியில் கூவம் ஆற்றில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement