மனு கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்: தனிப்பிரிவு செயல்பாடுகளை ஆய்வு செய்வாரா முதல்வர்?

1

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள, முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்த மக்கள், நேற்று கொளுத்தும் வெயிலில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர்.

த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தால் தீர்வு கிடைக்கும் என நம்பி, நேற்று தலைமைச் செயலகத்திற்கு ஏராளமானோர் வந்தனர்.

பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்தில் இருந்து, ராஜாஜி சாலையில், 300 மீட்டர் துாரத்திற்கு, நீண்ட வரிசையில் மக்கள் நின்றனர். பல்வேறு கெடுபிடிகள், சோதனைகளுக்கு பின், போலீசார், அவர்களை உள்ளே அனுமதித்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேல், வெயிலில் காத்திருந்த பலரும் சோர்ந்து போயினர். அங்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படவில்லை. தற்காலிக கழிவறைகள் கூட இல்லாமல், பெண்கள், முதியோர் பாதிக்கப்பட்டனர்.

திருப்பத்துார் மாவட்ட மலை கிராமத்தில் இருந்து, நேற்று தலைமைச் செயலகம் வந்த நரிக்குறவர் சமூக மக்கள், முதல்வரை சந்திக்க வேண்டும் என, போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள், 'இ -மெயிலில்' முதல்வருக்கு தகவல் அனுப்பி, அனுமதி பெற்றபின் வாருங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.

முதல்வர் தனிப்பிரிவில், மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றி, அதற்கான சான்று வழங்கப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்களில், 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.

காலை 10:00 மணிக்கு வரும் அலுவலர்கள், கணினியை 'ஆன்' செய்தால், 30 நிமிடங்களுக்கு பின்தான் செயல்பட துவங்குகிறது. அதற்குள் கூட்டம் கூடிவிடுகிறது. எனவே, கணினி வேகமாக செயல்பட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிப்பிரிவின் செயல்பாடுகளை, முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement