சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்

1


நமது நிருபர்




ஹரியானா மாநிலம் குருகிராமில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 13 பேரை பிடித்து, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினரை கண்டறிந்து அவர்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹரியானாவில் நுாற்றுக்கணக்கான வங்கதேசத்தினர் குடும்பம் குடும்பமாக தங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குருகிராமில் பல பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிலர் மீது சந்தேகம் வலுத்தது. அவர்களின் அடையாள ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

ஆதார் அட்டை காண்பித்த சிலரிடம் வேறு சில ஆவணங்களை காட்டும் படி போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில், வங்கதேச அடையாள அட்டைகள் சிக்கின. அந்த வகையில், 13 பேர் சிக்கினர். அவர்கள் அனைவரும் சட்டவிரோத நம் நாட்டுக்குள் புகுந்து, ஹியானாவில் குடியேறியது தெரிந்தது. பிறகு 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ''தேசியப் பாதுகாப்பிற்குப் பங்களிக்குமாறு மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், ஹோட்டல் ஊழியர்கள் அல்லது கட்டுமானத் தொழிலாளர்கள் என யாரையேனும் சந்தேகத்திற்குரியவர்களாகக் கண்டால், தயவுசெய்து 112 என்ற எண்ணை அழைத்தோ அல்லது உங்கள் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனை தொடர்புகொண்டோ அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும்," என்றனர்.

Advertisement