புத்தகங்கள் வாங்குவதை ஊக்குவிக்க மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல்

திண்டுக்கல்:மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கிய களம், பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறிவியல் அறக்கட்டளை சார்பில் அக்.,22 முதல் நவ.,1 வரை (10 நாட்கள்) திண்டுக்கல் மாவட்ட 13வது புத்தகத் திருவிழா பைபாஸ் ரோடு அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்க உள்ளது.

இத்திருவிழாவில் மாணவ, மாணவிகள் தங்களது சேமிப்பு தொகையை கொண்டு புத்தகங்களை வாங்கி வாசிப்புப் பழக்கம், வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாவட்டத்தில் 148 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 30 ஆயிரம் இலவச உண்டியல்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி மாணவ, மாணவிகளுக்கு உண்டியல்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் துர்கா முதற்கட்டமாக செட்டிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, சென்னமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி, அகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, தாடிக்கொம்பு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகளுக்கு இலவச உண்டியல்கள் வழங்கினார்.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, அறக்கட்டளை நிர்வாகி மோகன், சமூக பாதுகாப்புத் திட்ட மாவட்ட அலுவலர் ஹென்றிபீட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement