கவுதம் சாஸ்திரி அசத்தல் ஆட்டம் காரைக்கால் அணி வெற்றி 

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் 3வது சீசனின் 17 வது போட்டியில் ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காரைக்கால் நைட்ஸ் அணி மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது. 

ஸ்ரீராம் கேபிடல் வழங்கும் பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 3வது சீசன் கடந்த 7ம் தேதி சீகெம் மைதானத்தில் துவங்கி நடந்து வருகிறது. 17 வது போட்டியில் ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணி, காரைக்கால் நைட்ஸ் அணி மோதின. 

முதலில் பேட் செய்த காரைக்கால் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கவுதம் சாஸ்திரி 49 பந்துகளில் 83 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), அங்கித் சர்மா 48 ரன்கள் எடுத்தனர். ஊசுடு அணியில் கிருஷ்ணா பாண்டே 3 விக்கெட்களையும், சாகர் திரிவேதி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

பின் களமிறங்கிய ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அணியின் கிருஷ்ணா பாண்டே 42 ரன்களும், பிரபு 22 ரன்களும் எடுத்தனர். 59 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்கால் அணி வெற்றி பெற்றது. காரைக்கால் அணியின் கவுதம் சாஸ்திரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 6 போட்டிகளில் விளையாடிய காரைக்கால் நைட்ஸ் அணி, 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

Advertisement