இறக்குமதி பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்

புதுடில்லி: ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும், முக்கிய தொழில்துறை உள்ளீட்ட பொருட்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2025 - -26 நிதியாண்டில் கிட்டத்தட்ட 74 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசின் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த 38 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதியில், கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பல்வேறு தொழில்துறைகளின் உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்களாக உள்ளன. ஜவுளி, சோலார் பேனல் உள்ளிட்ட 100 பொருட்களை முதற்கட்டமாக தேர்வு செய்து, அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்து உள்ளன.

Advertisement