மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கலெக்டர் மதுபாலன் துவக்கி வைப்பு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பில், இணையதளம் மூலம் தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணியை, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தொடங்கி வைத்து கூறியதாவது:
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழகத்தில், வரும் ஆக., 1ல் துவங்கி, 30 வரை, வீடுகள்தோறும் சென்று, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது. 'வலுவான கொள்கை உருவாக்கவும், நீண்டகால செயல்திட்டங்களை வகுக்கவும், துல்லியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் முதற்கட்டமாக, சுய கணக்கெடுப்புக்கான காலம் நிர்ணயம் செய்யப்பட்டு, நேற்று முதல் வரும், -31 வரை, வீட்டின் வசதிகள் குறித்த அடிப்படை தகவல்களை, பயனாளர்கள் தாங்களாகவே மொபைல் போன் மற்றும் கணினி மூலம் பதிவேற்றம் செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயனாளர்கள் அனைவரும் தங்கள் மொபைல் போன் அல்லது கணினியில் https://se.census.gov.in - என்ற இணையதளத்தில், மாநிலத்தை தேர்வு செய்து, 'கேப்ட்சா' உள்ளீடு செய்த பின், மொபைல் போனுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பயன்படுத்தி, உள்
நுழைவு செய்யலாம். அவ்வாறு உள்நுழைவு செய்தபின், மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் முக்கிய நில அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும். திரையில் தோன்றும் வரைபடத்தை நகர்த்த, இரண்டு விரல்களால் தடவி தங்களது வீட்டை தேர்வு செய்யலாம். அதை உறுதிப்படுத்திய பின், சேமிக்க மற்றும் அடுத்து என்பதை தேர்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
அதன்பின் சென்சஸ் வீட்டு விபரங்கள் என அதில் கேட்கப்பட்டுள்ள, 33 கேள்விகளுக்கு தங்களின் வீடு குறித்த தகவல்களை பதிவு செய்து பின் பதிவேற்றம் செய்யலாம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், துல்லியமான தகவல்களை பிழையின்றி பதிவு செய்தபின் பதிவேற்றம் செய்து மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement