நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

19


புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பார்லியை முற்றுகையிட முயன்றதால், வன்முறை ஏற்பட்டு, தலைநகர் டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளும் பார்லியின் செயல்பாடுகளை முடக்கி வருகின்றனர்.

இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும், அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி பார்லி வளாகத்தை சுற்றிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

Advertisement