கிட்டசூராம்பாளையத்தில் பஸ் நிறுத்தம்  அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கிட்டசூராம்பாளையத்தில், பேருந்து நிறுத்தம் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி, கிட்டசூராம்பாளையம், ஆச்சிப்பட்டி, குரும்பபாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், கிட்டசூராம்பாளையம் அருகே ரோட்டின் இருபுறங்களிலும் திட்டமிடப்பட்டுள்ள பஸ் நிறுத்தம், விவசாயிகள், பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக அமைக்கப்பட வேண்டிய, 7 மீட்டர் அகலம் உள்ள தரைமட்ட சர்வீஸ் ரோடு அமைக்க இடையூறாக உள்ளது.

மேலும், அந்த பஸ் ஸ்டாப் உயரமான அமைப்பில் உள்ளதால், விவசாயிகள், உள்ளூர் பொதுமக்கள், பஸ் பயணியர் எளிதில் பயணிக்க முடியாத சூழல் உருவாகும். இதனால், பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு பஸ் நிறுத்தம் பயன் இல்லை.

எனவே, விவசாயிகள் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, கிட்டசூராம்பாளையத்தில் பஸ் நிறுத்தம் அமைப்பதை தவிர்த்து, போக்குவரத்து வசதிக்கு தேவையான, 7 மீட்டர் அகலம் உள்ள தரைமட்ட சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்றுமுன்தினம் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, பஸ் நிறுத்தம் அமைக்காமல் சர்வீஸ் ரோடாக இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும், ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வலியுறுத்தினர்.  இப்பகுதி மக்கள், நான்கு ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். 

Advertisement