ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்கம் : தமிழக அரசு புதிய திட்டம்

சென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, புதிய தொழில் கொள்கையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தமிழகத்தை, 2035க்குள், 1.50 டிரில்லியன் அமெரிக்க டாலர் (1.50 லட்சம் கோடி டாலர்) மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. எனவே, பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளுடன் கூடிய புதிய தொழில் கொள்கையை அரசு வெளியிட உள்ளது.

இதற்காக, எலக்ட்ரானிக்ஸ், வான்வெளி மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினரிடமும் கருத்துக்களை கேட்டு வருகிறது. இந்த பணிகளை வரும் அக்., மாதத்திற்குள் முடித்து, இந்தாண்டு இறுதி அல்லது, 2027 தொடக்கத்தில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கருத்து கேட்பின் போது, ஒவ்வொரு துறையை சார்ந்த தொழில்துறையினரின் தேவைகள் முழுவதுமாக கேட்கப்படுகிறது. அவற்றை நிறைவேற்றும் விதமாக தொழில் கொள்கையில் ஊக்குவிப்பு சலுகைகள் இடம்பெறும். பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்குவோருக்கு சலுகை விலையில் நிலம் வழங்கப்படும். அனைத்து அனுமதிகளையும், 21 நாட்களுக்குள் வழங்குவது கட்டாயமாக்கப்படும்.

மோட்டார் வாகனம், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழகம் வலுவாக உள்ளது. அவற்றுடன் செமிகண்டக்டர், மருந்து, மேம்பட்ட உற்பத்தி போன்ற புதிய துறைகளிலும் தமிழகத்தில் உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், சலுகைகள் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement