சின்னகரம் குடிநீர் குளம் சீரமைக்க கோரிக்கை

செஞ்சி: சின்னகரம் கிராமத்தில் குடிநீர் குளத்தை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வல்லம் அடுத்த சின்னகரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர். இவர்களின் வீட்டில் கிணறு, போர் இல்லை.

கிராம மக்களுக்கு அமைத்துள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் குடிநீர் உப்பு நீராக இருப்பதால் குடிப்பதற்கும், சமையல் செய்யவும் பயன்படுத்துவதில்லை.

இதனால், பல ஆண்டாக இங்குள்ள ஏரியில் அமைத்துள்ள குளத்தில் இருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். இந்த தண்ணீரை சமைக்கவும், குடிநீராகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது வறட்சி காரணமாக குளத்தில் தண்ணீர் வற்றி குட்டையாக மாறியுள்ளது. இதனால் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியாமல் பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேன் தண்ணீருக்காக தினமும் 35 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள நிலையில் மாதம் 1000 முதல் 2000 ரூபாய் வரை தண்ணீருக்காக செலவாகும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சேறும் சகதியுமாக உள்ள குளத்தை துார் வாரி, ஆழப்படுத்தி தொடந்து குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்வதுடன், குளத்தில் அசுத்தமான ஏரி தண்ணீர் கலக்காமல் இருக்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement