கூட்டுறவு பணியாளர்களின் கோரிக்கை; அலட்சிய அதிகாரிகளுக்கு 'கிடுக்கிப்பிடி'

சென்னை: கூட்டுறவு பணியாளர்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் அலட்சியம் காட்டிய நிலையில், அவர்களுக்கு 'கிடுக்கிப்பிடி' போடும் வகையில், வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடி, மருந்தகம் போன்றவை நடத்தப் படுகின்றன.

அவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, இரு மாதங்களுக்கு ஒரு முறை குறைதீர் கூட்டம் நடத்தி, தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த அதிகாரிகள் கூட்டம் நடத்தாமல், அலட்சியம் காட்டினர்.

இந்நிலையில், பணியாளர்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:

வட்டார அளவில் கூட்டுறவு சார் - பதிவாளர்கள், கள அதிகாரிகள், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் கோரிக்கை மனு பெற்று, அதற்கு தகுதியின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

கூட்டுறவு சார் - பதிவாளர் தீர்வு காண இயலாத கோரிக்கை மனுக்கள் மற்றும் துணை பதிவாளரால் பெறப்படும் மனுக்களுக்கும், துணை பதிவாளர்கள் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு காண வேண்டும்.

சார் - பதிவாளர் மற்றும் துணை பதிவாளரால் தீர்வு காண இயலாத மனுக்களுக்கும், மண்டல இணை பதிவாளர்களால் பெறப்படும் மனுக்களுக்கும், மண்டல இணை பதிவாளர்கள், மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு காண வேண்டும்.

அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, மண்டல அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில், மண்டல அதிகாரிகள் மற்றும் தலைமை அலுவலக கூடுதல் பதிவாளர்களுடன், பதிவாளர் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியவை மற்றும் இணை பதிவாளர்கள் நடவடிக்கை எடுக்காதவை குறித்து, கூட்டுறவு பணியாளர்களுடன் கூட்டு ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement