போலீசார் மீது  பீர் ஊற்றி ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது 

கடலுார்: கடலுார் ஆல்பேட்டையில் வாகன சோதனையின் போது, போலீஸ் காவலர்கள் தாக்கி பீரை ஊற்றிய 3 பேர் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கடலுார், ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று மாலை 5:00 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியி்ல் இருந்து கடலுார் நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடன், தலைமைக் காவலர் திரிசங்கு உள்ளிட்ட 3 போலீசார், விரட்டிச் சென்று மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகில் காரை சுற்றி வளைத்தனர். காரை சோதனை நடத்தியதில் 4 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இது தொடர்பாக, காரில் பயணித்த சேலம் விஜயபிரதாப்,34; கணபதி மகன் பிரகாஷ்,29; மனோகரன் மகன் அருண்குமார்,26; பாலகிருஷ்ணன், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சக்திவேல் ஆகியோர் விசாரணைக்காக புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வர முயன்றனர். ஆத்திரமடைந்த 5 பேரும், தலைமை காவலர் திரிசங்கு உள்ளிட்ட போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, அவர்கள் மீது பீரை ஊற்றி தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து தப்பிக்க முயன்றனர்.

 இதில், விஜயபிரதாப், பிரகாஷ், அருண்குமார் ஆகியோரை புதுநகர் போலீசார் கைது செய்து, தப்பியோடிய, பாலகிருஷ்ணன், சக்திவேலை தேடி வருகின்றனர்.  

Advertisement