நகராட்சி டெண்டரில் விதிமீறல் கால அவகாசம் வழங்க கோரிக்கை

ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட, 25 பணிகளுக்கு குத்தகை மற்றும் சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு, கடந்த ஜூலை, 13ல்
வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த டெண்டரில் பங்கேற்க விண்ணப்பிக்கும் விண்டோ வரும் ஜூலை, 28ல் தான் திறக்கப்படும், ஜூலை, 29 புதன்கிழமை காலை, 11:00 மணிக்கு ஏலம் மற்றும் டெண்டர் திறக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மனு தாக்கல் செய்ய ஜூலை, 28 தொடங்கி, 29ல் முடிவடையும் வகையில் ஒரே ஒரு நாள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும், குழப்பமும் நிலவி வருகிறது. டெண்டரில் பங்கேற்க குறைந்தபட்சம், 15 நாட்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மின்னணு ஒப்பந்தப்பணிகளில் ஈடுபட்டு வரும் வக்கீல் கார்த்திக் கூறுகையில், ''தமிழக ஒப்பந்தப்புள்ளி சட்டம்-1998, பிரிவு, 2000ன் கீழ் அனைத்து ஒப்பந்தங்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. அவசர அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே உடனடியாக டெண்டர் கோர முடியும். மற்ற பணிகளுக்கான டெண்டர்களுக்கு குறைந்தபட்சம், 15 நாட்களும், அதிகபட்சமாக, 30 நாட்களும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், நகராட்சி நிர்வாகம் ஒரே நாள் மட்டும் கால அவகாசம் வழங்கியிருப்பது விதிகளை மீறிய செயல்,'' என்றார்.

Advertisement