வீட்டுமனை நிலம் கேட்டு மா.கம்யூ., நுாதன போராட்டம்

எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம், குளத்துவலவு பகுதியில், 30 ஆண்டுகளாக 30க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியையொட்டி, 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. கடந்த, ஏழு ஆண்டுகளாக ஏரி நிரம்பி உபரி நீர் ஊருக்குள் சென்று குடியிருப்புகளுக்குள் புகுந்து சேறும், சகதியுமாக மாறி குடியிருக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, மக்கள் குடியிருக்க அரசு புறம்போக்கு நிலம் வழங்கக்கோரி, பலமுறை அதிகாரிகளிடத்தில் மனு அளித்திருந்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், கடந்த, 23 முதல் மா.கம்யூ., கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் எலச்சிபாளையம் ஆர்.ஐ., அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம், மக்கள் ஏரியில் இறங்கி போராட்டம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து, நேற்று, நாமம் மற்றும் பட்டை போட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., லெனின், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சுதா, ஆர்.ஐ., அருண் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலுசாமி, சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement