கைலாசநாதர் கோவிலில் அறுபத்து மூவர் விழா

ராசிபுரம்:ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு, 23ம் ஆண்டு பெருவிழா கடந்த, 21ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று மாலை பெருமிழலை குறும்ப நாயனார் குருபூஜையை முன்னிட்டு மூலத்திருமேனிகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில், 'ஆலம் உகந்தான் அருள்' என்ற தலைப்பில் சுப்ரமணியன் சொற்பொழிவாற்றினார். இரவு பேரொளி வழிபாடும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று பன்னிரு திருமுறைகளை அடியார் பெருமக்கள் தலையில் ஏந்தி திருக்கயிலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்று திருமண மண்டபத்தை அடைந்தனர்.
மாலை திருமுறை பெட்டகம் தலையில் ஏந்தி வர, ஐம்பெரும் மூர்த்திகள் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் திருவீதி உலா நடந்தது. இதில் சங்கு, பிரம்ம தாளம், எக்காளம் உள்ளிட்ட கயிலாய வாத்தியங்கள் முழங்க, வள்ளி கும்மி நடனம் மற்றும் சிலம்பாட்டத்துடன் பக்தர்கள் வலம் வந்தனர்.

Advertisement