இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு விதிப்பு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் உடல் பருமன் உள்ளவர்கள் செல்ல அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 7வது லிங்கமான குபேர லிங்கம் கோயில் உள்ளது. இதன் அருகில் இடுக்கு பிள்ளையார் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் குகை போன்ற வாசல் உள்ளது.

ஜூலை 24ம் தேதி குடும்பத்தினருடன் கிரிவலம் வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணிக்குமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோயில் வாசலில் உள்ளே நுழைந்துள்ளார். ஆனால் அவரால் வெளியே வரமுடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதன் பின்னர், உடல் பருமனான பெண் ஒருவர் இதே போன்று இடுக்கு பிள்ளையார் கோயில் குகை வாசல் வழியே உள்ளே சென்று வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்தார். பிறகு அவர் மீட்கப்பட்டார்.

இதையடுத்து, திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் உடல் பருமன் உள்ளவர்கள் செல்ல அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பலகை ஒன்றையும் கோயில் நிர்வாகம் வைத்துள்ளது.

அதில், பக்தர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி கோயிலின் உபகோயிலான இடுக்கு பிள்ளையார் கோயிலின் வாயில் மிக குறுகலாக உள்ளதால் உடல் பருமன் உள்ளவர்கள், உடல் நலக் குறைவு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement