தெய்வமும், மகனின் கடின உழைப்பும் கைவிடவில்லை: வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியின் தாய் உருக்கம்

10

-நமது நிருபர் -

தெய்வத்திடம் நான் வைத்த பிரார்த்தனையும், எனது மகனின் கடின பயிற்சியும் அவனை கைவிடவில்லை; காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி தாய் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து



ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டின் ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, ஸ்னாட்ச் மற்றும் க்ளீன் அன்ட் ஜெர்க் சுற்றுகளில் (126 + 160) மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கூலி வேலை பார்த்து



இந்த வெற்றி தொடர்பாக ராஜா முத்துப்பாண்டியின் தாயார் பேச்சியம்மாள் கூறியதாவது: கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்து என்னென்ன செய்து கொடுக்க வேண்டுமோ அதனை செய்து கொடுத்தேன். 2026 ல் வெற்றி பெற்றது சந்தோஷமாக உள்ளது. 2015 ஜப்பான், மலேஷியா, ஆஸ்திரேலியா என பல நாடுகளுக்கு சென்று 7 பதக்கங்கள் பெற்று வந்துள்ளார். 2018 காமன்வெல்த் போட்டியில் விளையாடி 6வது இடம் வந்தார். 2022ம் ஆண்டு காலில் அடிபட்டதால் விளையாடவில்லை. 2026 ல் வெற்றி பெற்றது மிகவும் சந்தோஷம் எனக்கு. ஆனந்த கண்ணீர் வருகிறது. தெய்வம் கைவிடவில்லை. பிரார்த்தனை மகனை கைவிடவில்லை.

சந்தோஷம்



ராஜா முத்துப்பாண்டி தந்தை ரோடுமேன். நான் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றுகிறேன். கரிமருந்தில் தான் இரண்டு ஷிப்ட் வேலை பார்ப்பேன். குழந்தைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என இரண்டு ஷிப்ட் பணிபுரிந்துள்ளேன். ஓடி ஓடி வேலை பார்த்து எனது குழந்தைகளை நல்ல வர வேண்டும் என உழைத்தேன். கஷ்டமான சூழ்நிலை. குழந்தையை கொண்டு வர வேண்டும் என்ற வெறி. நிலைமையை விட்டுவிடக்கூடாது. மகனும் நல்ல பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டார். அதனை விடக்கூடாது. குழந்தைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என ஊக்கம் கொடுத்தேன். இன்று பதக்கம் வென்றுவிட்டார்.சந்தோஷம். இவ்வாறு அவர் கூறினார்.




பலன்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி - பேச்சியம்மாள் தம்பதியின் இளைய மகன் ராஜா. ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில், இந்தியா சார்பில் பாங்கேற்ற ராஜா 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் கோவில்பட்டி சங்கலிங்கபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுள்ளனர். ராஜாவின் தந்தை முத்துப்பாண்டி சுமை துாக்கும் தொழிலாளியாகவும், தாய் பேச்சியம்மாள் தீப்பெட்டி ஆலையில் தொழிலாளியாகுவும் பணிபுரிந்து வருகின்றனர்.

ராஜாவின் அண்ணன் சுரேஷ்குமார் பளுதுாக்கும் வீரர் ஆவார். மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று அவர் வெற்றியும் பெற்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள ராஜாவும், அவரது அண்ணன் சுரேஷ்குமாரும் துவக்கத்தில் கபடி விளையாட்டில் ஆர்வம் செலுத்திய நிலையில், உடலை பராமரிக்க வேண்டும், உடல் வலிமை பெற வேண்டும் என்பதற்காக சங்கரலிங்கபுரத்தில் உள்ள ஜிம்மில் பயிற்சி பெற சென்றுள்ளனர்.

அவர்கள் ஜிம்மில் காட்டும் ஆர்வத்தை பார்த்து அங்குள்ள பயிற்சியாளர்கள் இருவரையும் பளுதூக்கும் விளையாட்டிற்கு தயார் செய்துள்ளனர். கடந்த 2018 ல் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று ஆறாவது இடம் பிடித்த ராஜா, தொடர்ந்து, உடல் நலம் பாதிப்பால் 2022 ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை.

தற்போது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதுாக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று ராஜா சாதனை படைத்துள்ளார்.



இதுகுறித்து அவரது பெற்றோர் முத்துபாண்டி, பேச்சியம்மாள் ஆகியோர் கூறியதாவது:

நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கபடி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் உடலை வலிமையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எங்களது மகன் ராஜா ஜிம்மிற்கு சென்றார்.அங்குள்ள பயிற்சியாளர்கள் பளுதுாக்கும் பயிற்சி செய்தால் நிச்சயமாக ஒரு நல்ல இடத்திற்கு வர முடியும் என கூறியதால் எனது மகனுக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது.அவனின் ஆர்வத்தைக் கண்டு நாங்களும் கஷ்டத்தை பார்க்காமல் கூலிவேலை செய்து அந்தப் பயிற்சிக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தோம்.

2018 மற்றும் 2022 ல் காமன்வெல்த் போட்டியில் முயற்சி செய்து வெற்றி பெற முடியவில்லை. தற்போது வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement